×

ஆன்லைன் விளையாட்டை நம்பி 100 சவரன் நகைகளை இழந்த வங்கி ஊழியர்

ஆவடி:ஆவடியை அடுத்து திருமுல்லைவாயல், ஜெயலஷ்மி நகரைச் சேர்ந்தவர் ஜோயல்(32). இவர், அயப்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, இவருக்கு ‘வாட்ஸ ஆப்’ பில் ஒரு குறுங்தகவல் வந்தது. இதில், யூடியூபில் மூன்று வீடியோ அனுப்புவோம், அதை லைக் செய்து புகைப்படம் அனுப்பினால் ஒரு வீடியோவிற்கு ரூ.50 வீதம் மூன்று விடியோவுக்கு ரூ.150 வரும் என கூறியுள்ளனர். அதன்படி, அவர் செய்தபோது அவர்கள் கூறியதுபோல், அவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளது. இதை தொடர்ந்து, டெலிகிராம் ஆப் வாயிலாக பணம் கட்டி விளையாட, போன் செய்து கூறியுள்ளனர். அதன்பேரில், முதலில் ரூ.1000 கட்டி ஜோயல் விளையாடியபோது அவரது வங்கி கணக்கிற்கு ரூ.1,300 வந்துள்ளது.

இதையடுத்து, அந்த விளையாட்டில் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அந்த குழுவிலும் அவர் இணைந்து பெரிய தொகையாக ரூ.65 ஆயிரம் முதலில் செலுத்தி, படிப்படியாக அவர்கள் அந்த பணத்தை நீங்கள் மீண்டும் வெல்ல வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். இதேபோல், அவர்கள் கொடுத்த 12க்கும் மேற்பட்ட டாஸ்க்களை நம்பி ஒரு லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர், நீங்கள் இதில் தோற்று விட்டீர்கள். இந்த பணம் உங்களுக்கு வேண்டுமென்றால் மீண்டும் பணம் கட்ட வேண்டும் படிப்படியாக இவரிடமிருந்து ரூ.30 லட்சமும், இவரது மனைவியின் நகை 100 சவரன் உள்ளிட்டவை பெற்று விளையாட்டில் தோற்று விட்டீர்கள் என்று கூறியதால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், இது குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கரிடம் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில், ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஆன்லைன் விளையாட்டை நம்பி 100 சவரன் நகைகளை இழந்த வங்கி ஊழியர் appeared first on Dinakaran.

Tags : Awadi ,Joel ,Thirumullaivayal, Jayalashmie ,Ayypakkat ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்